காளியுக அவதாரம்

நிலவறை
பெண்ணியம் நிமிர்ந்து வந்து
போட்டுத் தெறித்த
வார்த்தை அருவி ஓட்டத்தில்
எனக்குள் மாயை அகன்று
தீயைச் சுட்டேன்.
அப்போது நிலவு சுட்டது
சூரிய ரேகைகள் குளிர்ந்தது

நான் -
நமத்துப் போன எழுத்துக்களில்
நாகரீகம் தேடினேன் .
யான்-
செதுக்கியதான சிற்பங்களில்
புகலிடம் பாடினேன் .

வஞ்சப் புகழ்ச்சியாய் பலர்வந்து
வரிந்து கட்டிய ராஜ்ஜிய பரப்புகள்
காக்கைகளின் எச்சத்திலும்
கழுகுகளின் பார்வையிலும்
பூஜ்யமாகியது .

எனக்குள் இப்போது மோனலிஸா உருவாகி
என்னை-
கவி சிருஷ்டிப்பவளாகவும்இல்லாமல்
கட்டைப் பெண்மணியாகவும் இல்லாமல்
அவதாரம் எடுக்கச் சொல்லியது .
அது அனேகமாக
கலியுக அவதாரத்திற்குப் பக்கத்தில்
காளியுக அவதாரமாக இருக்கும் .

எனதான பயணத்தின்போது
என்தோளில் தொங்கும் பைக்குள்
கண்ணாடிப் பொட்டோடு
கத்தியும் இருப்பதை
தயவு செய்து
சத்தம் போட்டுச் சொல்லாதீர்கள்.

எழுதியவர் : சுசீந்திரன். (16-Sep-15, 2:24 pm)
பார்வை : 61

மேலே