அம்மா ஓர் அதிசயம்

* * * * * * * * * *

உடைந்து
உயிர் திரட்டி
உதிரத்தால்
உணர்வெழுதி
உருவாக்கும்
உலகின் மறை !

உயிர்ப்
பிரபஞ்ச
உன்னதம் !

அன்பிற்கும்
அகர மொழிக்கும்
இப் பிறப்பிற்கும்
முதல் முகவரி !

துக்கம் துன்பம்
தூரம் எதிலும்
துவளாத
மடி ஏந்திச்
சுமக்கும் மலை !

பாரம் கருணை
பக்குவம் எதிலும்
பார் முழுதும்
தாங்கும்
உயிர் மரம் !

அன்பையும்
அணைப்பையும்
கருவாக்கி
உருவாக்கி
உருக்குலையும்
அடர் அருவி !

மன்னிப்பதிலும்
தண்டனையின்றி
குற்றம் களைவதிலும்
உச்ச நீதிமன்றம் !

கொட்டிக் கொட்டி
கொடுத்தாலும்
தீர்ந்து விடாத
பாசத்தின்
புதையல் !

ஆண்டவனின்
பேசும்
நடி பாத்திரம் !

அர்ச்சனை இல்லாது
வரங்களை
அள்ளி அள்ளிக்
கொடுக்கும் கடவுள் !

அரண்மனையும்
ஆலய கோபுரமும்
விஞ்சி விட்ட
சொர்க்காபுரி !

ஒரே வார்த்தையில்
அன்பொழுக
எழுதப்பட்ட
பெருங் காப்பியம் !

எதுவித
எதிர்பார்ப்பும் அற்ற
கலப்படமற்ற
பாச
நிறை கலசம் !

உயர்
உணர்வன்பின்
ஒட்டு மொத்தம் !

அவள்
ஓர்
அற்புத மொழி !

அவளைப் பாட
தமிழில் வார்த்தை தேடி
தோற்றுப்போனது
என் கவிதை .........!

" அம்மா ! "
" அவள் ஓர் அதிசயம் "

- தமிழ் உதயா -

எழுதியவர் : தமிழ் உதயா (14-Jan-16, 7:54 am)
Tanglish : amma or athisayam
பார்வை : 833

மேலே