குழந்தை விளையாட்டு
மணல் வீடுகட்டி
மண்ணோடு விளையாண்டோம்....
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஓராயிரம் பூ பறித்தோம்....
அண்ணனுக்கு நிகராக
கோலிகுண்டும் பம்பரமும்
கும்மாளமாய் ஆடிவந்தோம்...
ரைட்டா... ரைட்டு
ரைட்டா... ரைட்டு என்று
சில்லி போட்டு குதித்து வந்தோம்...
கல்லாங்காயை கையில் எடுத்து
கணக்காய் விளையாடி வந்தோம்...
தாயத்தின் கட்டையில்
ஒன்று இரண்டு கற்று வந்தோம்...
பல்லாங்குழியின் ஆட்டத்தில்
பல கதைகள் பேசி வந்தோம்...
நொங்குவண்டி செய்து
தெருத்தெருவாய் சுற்றி வந்தோம்...
பனை ஓலை காத்தாடி செய்து
சர்ரென காற்றில் விட்டோம்...
ஓட்டப்பந்தய விளையாட்டில்
தன்னம்பிக்கை தான் வளர்த்தோம்..
கூட்டாஞ்சோரு விளையாட்டில்
பகிர்ந்து உண்ணக் கற்றுக்கொண்டோம்...
இக்கால பிள்ளைகளோ
உட்கார்ந்த இடத்திலேயே
பல விளையாட்டை ஆடுகிறார்..
அவர்களை மடியிலேயே வைத்துக்கொண்டு
மண்ணில் கால் வைக்கக்கூட விடுவதில்லை பெற்றோர்கள்...
.