அவசரக் கல்யாணம்

அவசரம் என்றாலே ஆபத்து அங்கே
ஆயினும் உணர்பவர் இல்லை இங்கே !
பொறுமை என்பதும் பொன் போன்றதே
புரிந்துக் கொண்டவர் பூமியில் குறைவே !
அவசரமாய் கல்யாணம் செய்வர் பலரும்
அடுக்கிடுவர் காரணம் ஆயிரம் அதற்கும் !
தலைமுறை தழைத்திட அவசரம் எனபர்
தவறுகளை மறைத்து பின்னால் தவிப்பர் !
சாதிமதம் மாறாது தேடுவர் பெற்றோர்
சாதகமாய் மாற்றுவர் சறுக்கி விழுவர் !
கலப்பு மணமெனில் ஒதுங்கி ஓடுவர்
சலசலப்பு எழும் சட்டென முடித்திடுவர் !
சோதிடம் கூறுபவர் போதி மரமாவார்
வாதிடும் மகளிடம் போரிட்டு வெல்வர் !
ஆய்ந்திட நேரமின்றி அவசரம் காட்டுவர்
மாறிடும் கோலமும் தவறான புள்ளியால் !
காதலிக்கும் மனங்களோ காற்றினும் வேகம்
காட்டிடும் அவசரத்தால் பிரிந்திடும் உறவுகள் !
சாத்திரங்கள் கூறிடும் சாத்தான்கள் பலரால்
பாத்திரங்கள் மாறுது கணவன் மனைவியென !
இணையத்தின் மூலம் இணைகின்ற மனங்களுக்கும்
இளைப்பாறிய பின்னர் இலையுதிர் காலமாகிறது !
பழனி குமார்