திருமணத் தேதி குறித்த தினத்திலிருந்து

திருமணத் தேதி குறித்த தினத்திலிருந்து
சம்பந்தப்பட்ட இரு வீடுகளில்
அன்றன்றைய நிகழ்வுகள் அன்றாட நிகழ்வுகளாக இல்லை...

ஒரு வீட்டில் பரபரப்பும் பரவசமும்
மற்றொரு வீட்டில் பதற்றமும் பரிதவிப்பும்
தொற்றிக்கொண்டது...

மண்டப தேதிகள் அவசரமாக முடிந்து போயின....
பட்டியல் காகிதங்கள் அடித்தெழுதி கிழிந்தன...
அச்சிதழ்களில் அச்சரங்கள் பிசகிக்கொண்டன...
மரியாதை நிமித்தங்கள் தராசில் அளக்கப்பட்டன...

பழைய வீட்டுக்கு பிறந்த நாள் வந்தது...
பக்கத்து வீடுகள் பூதக்கண்ணாடியால் கவனித்தது...
உறவுகளின் கொடுக்கல் வாங்கல் சரி பார்க்க பட்டது...
பட்டிமன்ற இரவுகள் நீண்டுக்கொண்டிருந்தது...

பையனின் அம்மாவிற்கு அடுத்த வீட்டு பெண்கள் வகுப்பெடுத்தார்கள்...
பெண்ணின் அப்பாவிற்கு அதிகமாய் மூச்சிரைத்தது...
பெண் கையில் மருதாணி வைத்தாள்...மனம் தினம் சிவந்தது...
பையன் கிறுக்க தொடங்கினான்....முதல்முறை கவிஞன் ஆனான்...

திருமணத் தேதி குறித்த தினத்திலிருந்து
சம்பந்தப்பட்ட இரு வீடுகளில்
அன்றன்றைய நிகழ்வுகள் அன்றாட நிகழ்வுகளாக இல்லை...

எழுதியவர் : சிவா. அமுதன் (9-Mar-19, 12:20 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 73

மேலே