ஞான குரு
அடியவர்கட்குத் தானே ஞானகுருவாக வந்து மெய்ப் பொருளை உபதேசித்துக் கடைத்தேற்றும் பெருமான் கச்சி ஏகாம்பர நாதனே! அவனுக்கு அந்த ஞானத்தை எவர் போதித்தனர்? அதனைப் பற்றிக் கூறும் செய்யுள் இது.
நேரிசை வெண்பா
எவர்தமக்கும் ஞானகுரு வேகாம்ப ரேசர்
அவர்தமக்கு ஞானகுரு வாரோ - உவரியனை
கட்டினான் பார்த்திருக்கக் காதலவன் றன்றலையிற்
குட்டினான் தானே குரு. 156
- கவி காளமேகம்
பொருளுரை:
“எத்தகையோருக்கும் ஞானகுருவாக உபதேசித்து அருள் செய்கின்ற பெருமான் கச்சி ஏகாம்பர நாதனே; அந்தப் பெருமானுக்கு ஞான குருவாக இருந்து அதனை உபதேசித்தவர் யார்? கடலுக்கு அணை கட்டியவனான திருமால் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரத்திலேயே, அவனுடைய மகனான பிரமனின் தலையிலே குட்டினானே அந்தச் சிவகுமரன்தான் அவனுக்கு ஞானகுருவாக இருந்து உபதேசித்த பெருமான்.
பிரணவப் பொருளை அறியாத பிரமனைத் தலையிலே குட்டிக் கந்தமாதனக் குகையிலே அடைத்து வைத்தவன் குமரப் பெருமான். பின்னர் தேவரும் மூவரும் வேண்ட அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை விடுவித்த பெருமான்,
தன் தந்தையின் வேண்டுதலின்படி அவருக்குப் பிரணவப் பொருளை உணரத்தினான். அந்தக் குமரகுருபரனின் செயலையே காளமேகம் இப்படிக் கூறுகின்றனர். இதனாற் சிவபெருமானின் கருணை வெள்ளத்து மிகுதியையும் உரைத்தனர்.