தாய் வீடு

தாய் வீடு
————
பெண் மட்டுமல்ல 

ஆணும் ஏங்குவான் 

பண்டிகை நாளில் 

தாய் வீட்டிலிருக்க.. 


பணத்தைத் தேடி 

பலமைல் தாண்டி 

பணிச்சுமை சுமக்கும் 

பல செல்வன்கள் மட்டும் 

பண்டிகை நாளில் 

பறந்து செல்வர் 

தாய்வீட்டைத் தேடி.. 



தாய் மகள் உறவில் 

பேச்சு மிகுந்திருக்கும்.. 

தாய் மகன் உறவில்

பாசம் மிகுந்திருக்கும் 

அம்மகன் எம்மனிதனாயினும்.. 



தாயின் தனிமை 

மகன் மட்டுமுணர்வான்.. 

மகனின் தனிமை 

தாய் மட்டுமுணர்வாள்.. 

மற்றவர் அறியா 

அத்தனிமை உணர்வு 

மடிந்தே போகும் 

அவ்விருவர் மனதில்.. 



லட்சங்கள் இறைத்து 

பல மாடிகள் கட்டி

பல குடிகள் அமர்த்தி 

தன் தாய் வீடில்லா 

ஏழையாய் பல பேர் 

என்னையும் சேர்த்து.. 



ஆயிரம் செல்வம் 

அவன் சேர்த்தாலும் 

ஆயிரம் கைகள் 

அவனை அரவணைத்தாலும்
தாய் வீடில்லா மனிதன் 

இம்மண்ணில் அனாதையே.. 

-------- 
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (10-Nov-23, 9:57 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 267

மேலே