விந்தையான ஆளு

பசும்புல்லை மட்டும் மேய்ந்துவிட்டு பாலுடன் உடலையும் தந்திடும் ஆடு
அதன் பால் மட்டுமின்றி உடலையும் உரித்து சுவைக்கிறான் இந்த ஆளு

புல் புண்ணாக்கை அசைபோட்டுவிட்டு சுவையான பால் தருகிறது மாடு
பிறரை புண்ணாக்காக எண்ணி, அவனிடமே பிடுங்கி சாப்பிடுவது ஆளு

பசி எடுக்கும்போது, இன்னொரு விலங்கை கொன்று உண்டிடும் சிங்கம்
பசி தணிந்தாலும் பணருசி என்றுமே தணியாத பேராசைகொண்ட ஆளு

உடலால் உயர்ந்து பெருத்திருப்பினும் சைவ உணவே உண்ணும் யானை
உடல் மனம் சிறுத்திருப்பினும் அசைவத்தையே அதிகம் உண்ணும் ஆளு

எப்போதாவது ஒருமுறை கடித்தாலும், நன்றியுணர்வுடன் இருப்பது நாய்
எந்நேரமும் பிறரை உடலாலும் மனதாலும் கடித்துக்குதறும் பெரிய ஆளு

பாலைத் திருடிக்குடித்தாலும் வேறு எதையும் திருடாமல் வாழ்வது பூனை
மற்றவர் பொருள் எதுவானாலும் திருடிக்கொண்டு ஓடுகிறான் இந்த ஆளு

மரம்விட்டு மரம் தாவினும் தன் இயற்கை சுபாவத்துடன் வாழ்வது குரங்கு
எந்நேரமும் எண்ணமரங்களில் தாவித்தாவி செயற்கையாய் வாழுது ஆளு

ஐந்தறிவானாலும் வஞ்சனை குரோதம் கர்வம் இல்லாமல் வாழுது விலங்கு
ஆறறிவிருந்தும் இக்குணங்களையே பெற்று சீரழியுது இந்த விந்தை ஆளு

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Aug-24, 4:16 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 48

மேலே