அனாதை வானம்

உறவுகளே உறவுகளே-
பறவையெனை
உதறிவிட்ட சிறகுகளே
நலந்தானா ?

முத்தம் துறந்த வேளையிலே
சத்தம் போடும் உதடுகளே
நலந்தானா?

பந்தமெனை கரைத்த நாழிகையிலே
சந்தம் தொலைத்த கவிதைகளே
நலந்தானா ?

அதிகாலை எனை வெறுக்கையிலே
அதிகாரக்கூவலிடும் சேவல்களே
நலந்தானா?



மனிதர்களே மனிதர்களே
மனிதமெனை
மறுத்த உயிர்களே
நலந்தானா ?

நலம் நலமென
பொய்யுரைத்தே
பொய்களின் கோட்டையில்
மெய்களின் கொடிகளை
இறக்கிவிடாதீர்.

நானொரு தென்றல்
மெய்க்கொடியின் அசைவுகளில்
உறவுக்கொண்ட தென்றல்.

தனியாக வீசும் காற்றினை
தனியாக ஒளிரும் சூரியனை
தனியாக மின்னும் நிலாவினை
யாரும் அனாதையென்று
சொல்வதில்லையே..!

உறவுகளே உறவுகளே
பறவையெனை
வெறுத்த சிறகுகளே
நலந்தானா ?



-வியன்

எழுதியவர் : வியன் (4-May-15, 10:28 pm)
பார்வை : 76

மேலே