எல்லாம் அவள் செயல் 3

ஏன் இந்த தனிமைத்துயர்?
யாராவது அழைக்க மாட்டார்களா?
குறுந்தகவலாவது அனுப்ப மாட்டார்களா?
ஆமாம்
அவள் விரல் தீண்டவே வேண்டிகிடக்கிறது
"கைப்பேசி"...

இந்த எறும்பு கூட்டங்களுக்கு என்னவாயிற்று?
படியளக்க வில்லையோ பரமன் இன்று
மணற்கற்களை இழுத்துச்செல்கிறது மல்லுக்கட்டி..
கரும்புத்தோட்ட மண்துகளோ?
காரணம்தேடி விழைந்த போது
அவளின் காலடிச் சுவடென
என் காலைக் கடித்துச் செல்கிறது..

இன்றாவது இளைப்பாறி செல்லமாட்டாளா
என் நிழலில்.?
மழை வரம் விடுத்து
வெயில் வரம் வேண்டி
ஒற்றைக் காலில் தவம்
"வீதியோர மரங்கள்"..

அதென்ன..?
என்னவாயிற்று அந்த கிளிகளுக்கு?
பழங்கள் விடுத்து
வசம்பை கொறிக்கிறது..
ஓ..
அவள் வளர்க்கும் பேசும் கிளியோடு
அவள் பேசியதை பார்த்திர்க்கும் போல...

பிடிப்பவரை எதுவும் செய்யமாட்டேன் இனி..
ஏழரை ஆண்டுகள் மட்டுமல்ல
எப்போதும் பிடித்துக் கொள்ள அனுமதியுங்கள்
"அவளை மட்டும்"
கோரிக்கை மனு கொடுக்கிறான்
சனிபகவான் தன் முதல்வரிடம்...

எழுதியவர் : மணி அமரன் (17-Jun-15, 1:48 pm)
பார்வை : 119

மேலே