முகநூல் விநோதங்கள்

அறிந்தவரை அறியாதவராய்
கடந்து செல்கிறோம்
அறியாதவரை அறிந்தவராக
லைக் செய்கிறோம் ...

படிக்காத பதிவுகளுக்கும்
கருத்தைப் பதிவிடுகிறோம்
படித்தும் சில புரியாமல்
நகர்ந்து செல்கிறோம் ...

பிடித்த பதிவுகளை
பகிர்ந்து மகிழ்கிறோம் ...
நையாண்டி சித்திரத்தையும்
குத்திக்காட்டும் நக்கல்களை
விரும்பிப் பார்க்கிறோம்
பரவசமும் அடைகிறோம் ..

ஒத்துப்போனக் கொளகையை
நச்சென பதிவிட்ட நண்பருக்கு
நற்சான்றிதழ் அளிக்கிறோம் ...

அழகான காட்சிகளை
அரைநொடி உற்று நோக்குகிறோம்
கண்கவர் புகைப்படங்களை
கால்நிமிடம் கண்டு ரசிக்கிறோம்
உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க ....

ஒப்புக்காவது சிலருக்கு
ஒருமுறை கருத்திட்டு
ஒருநிமிடம் மகிழ்கிறோம்
ஒவ்வாத ஒன்றை கண்டால்
ஒதுங்கி செல்கிறோம்... .

நம்பியிருப்பர் சிலர் நம்மை
வந்து வாசிப்பார் என்றே
தவிர்த்தும் விடுவோம்
தள்ளியும் சென்றிடுவோம்
தவறுதலாக நாமும் ....

விடவும் மனமில்லை
விட்டுவிடவும் தோன்றவில்லை
முகநூல் நட்புகளை
அகத்தினில் பதிந்திட்ட
அன்பான நண்பர்களை
உறவாடும் நெஞ்சங்களை
உரையாடும் உள்ளங்களை ....

என்னுடைய எண்ணமிது
எழுந்திட்ட உணர்விது
எல்லோருக்கும் பொருந்துமா
எழுதியதும் சரிதானா
விடையறிய விரும்புகிறேன்
விரும்பியதை பதிவிடுங்கள்
கருத்தாக அனைவருமே !


பழனி குமார்
24.09.2017

எழுதியவர் : பழனி குமார் (24-Sep-17, 8:15 am)
பார்வை : 81

மேலே