வாழுவோமே நிகழ் காலத்தில்தான்

எவ்வளவு படித்திருந்தாலும், பல விஷயங்களை தெரிந்திருந்தாலும், அவ்வப்போது நம் அடி மனதில், ஏன் நாம் பிறந்தோம், எதற்கு இந்த அரத்தமற்ற வாழ்க்கை, இன்னும் எவ்வளவு காலம் நாம் வாழ்வோம், எப்போது நாம் இறப்போம், இறக்கும் போது எப்படி இருக்கும்? அதன் பின் நமக்கு என்னவாகும்? நம்முள் இருக்கும் ஆத்மா மீண்டும் பிறக்குமா? ஒரு வேளை பிறந்தால் எப்படிப் பிறப்போம், போன ஜென்மத்தில் என்னவாகப் பிறந்திருப்போம், இன்னும் எவ்வளவு முறை பிறப்போம்......இது போன்ற சந்தேகங்கள், ஒன்றா , இரண்டா, மூன்றா? ஒவ்வொரு நாளும் இதைப் போன்ற ஏதோ ஒரு எண்ணம் மனதில் ஓடிய வண்ணம் தான் இருக்கிறது. வேலை ஓய்வு பெற்று, வீட்டில் அதிக நேரத்தைச் செலவிடும் பலர்க்கு இதைப் போன்ற தாக்கங்கள் அதிகம் இருக்கும். நமக்கு தெரிந்தவர்கள் இறக்கும்போது, இத்தகைய நெருடல்கள், குழப்பம், கவலை அதிகமாகவே இருக்கும்.

எதற்காக அனாவசியமாக குழப்பிக் கொள்ள வேண்டும்? இருக்கிற வரை , கிடைத்ததைக் கொண்டு திருப்பதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ்வோம். இறப்பைப் பற்றிய நினைவுகள் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதையே அதிகம் நினைத்து வருந்துவதில் உபயோகம் ஒன்றும் இல்லை. பிறந்தவர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறப்பதையும் நாம் கண் கூடாகக் காண்கிறோம். இது இயற்கையின் நியதி. எனவே, எப்போதும் வாழ்வை ஒவ்வொரு கணத்திலும் மகிழச்சியுடன் வாழ்வோம். இதோ..இதோ..இந்த நொடி..இந்த நிமிடம்..இதில் சந்தோஷத்தைக் காண்போம்.
கடந்த காலம் ஒரு பைசாக்கு உதவாது. வருங்காலம் பற்றிய சிந்தனை மகிழ்ச்சியைத் தராது. எனவே, நண்பர்களே, நிகழந்து கொண்டிருக்கும், ஒவ்வொரு மணியிலும், நிமிடத்திலும், நொடியிலும், சிரித்து, மகிழ்ந்து வாழுங்கள். உங்கள் மகிழ்ச்சியை உங்களுக்கு பதிலாக வேறு யாரும் அநுபவிக்க முடியாது. தைரியமாக, துணிச்சலாக வாழுங்கள். இவை இரண்டும் தான் உங்கள் மகிழ்ச்சியை தப்ப வைத்துக் கொள்ள சிறந்த ஆயுதங்களாகும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Jun-21, 11:01 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 78

மேலே